ETV Bharat / state

சசிகலா தேர்தலில் போட்டியிடுவாரா? - டிடிவி தினகரன் பதில்!

author img

By

Published : Feb 9, 2021, 10:39 AM IST

Updated : Feb 9, 2021, 10:59 AM IST

சட்டப்பேரவை தேர்தலில் சென்னை ஆர்.கே நகர் உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன், சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்ட ஆலோசனை பெறப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ttv dinakaran
ttv dinakaran

பெங்களூருவில் இருந்து நேற்று காலை 7:30 மணி அளவில் சென்னை புறப்பட்ட சசிகலா சுமார் 24 மணி நேர பயணத்திற்குப் பிறகு இன்று காலை 6:30 மணி அளவில் சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா இல்லத்திற்கு வந்தடைந்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "24 மணி நேரம் பயணம் செய்ததில் சசிகலா உடல் நிலையில் எந்த பாதிப்பும் இல்லை அவர் நன்றாக இருக்கிறார். நான்கு ஆண்டுகளாக நான் சொல்லக்கூடிய ஸ்லீப்பர் செல், சட்டப்பேரவை உறுப்பினராக மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் இருக்கலாம் விரைவில் வருவார்கள்.

பராமரிப்பு பணிக்காக அதிமுக அலுவலகத்தை மூடி வைத்திருப்பதாக கேள்விப்பட்டோம், எங்களைப் பார்த்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் பயப்படவேண்டாம் நாங்கள் அவர்களைப் போல் குறுக்கு வழியில் செல்ல மாட்டோம்.

அதிமுகவிலிருந்து என்னிடம் நிறைய பேர் பேசினார்கள் அதை எல்லாம் வெளிப்படையாக கூற முடியாது. அமமுக தொண்டர்களுடன் அதிமுக தொண்டர்களும் சசிகலாவை வரவேற்றனர்.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஆர்.கே நகர் உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன். சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்ட ஆலோசனை பெறப்படும். ஆளுமை என்கிற வார்த்தைக்கே அதிமுகவில் இடமில்லை. குருட்டு யோகத்தில் தவழ்ந்து வந்து பதவி பெற்றவர் பழனிசாமி.

டெல்லிக்கு சென்றாலே அரசியல் காரணம் தான் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஜெயலலிதா நினைவிடத்தை திறந்தவுடன் சசிகலா அங்கு செல்வார். திமுக ஆட்சிக்கு வர கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் அதற்காக எதையும் செய்வோம். அதிமுக பொதுக்குழுவை கூட்ட பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு" என தெரிவித்தார்.

Last Updated : Feb 9, 2021, 10:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.